சென்னை: சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான எச்சரிக்கை நிகழ்வாகவே சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்தைப் பார்க்க வேண்டும்.
2007 ஜூலைக்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறைப்படுத்த, நகரமைப்பு சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்ட, '113 சி' பிரிவை கட்டாயமாக அமல்படுத்திட வேண்டும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினர் எம்.ஜி. தேவசகாயம் கூறியுள்ளார்.
மேற்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தால் இந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
133-சி பிரிவானது, கட்டடங்களை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.வால் உருவாக்கப்பட்டது.
தி.நகர் உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் உட்பட 25 கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவையாகும். 113-சி பிரிவின் கீழ் வழங்கப்பட்ட எந்த சலுகைகளையும் பெற அந்த கட்டடம் தகுதி பெறவில்லை. எனினும் அந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளை சென்னை உயர் நீதிமன்றமே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 25 கட்டடங்களிலுமே தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்படவில்லை என்பது சிஎம்டிஏ அளித்த தகவலில் தெரிய வந்துள்ளது.
அதாவது, 2006ம் ஆண்டு விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை சில்க்ஸ் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கப்பட்டது. ஆனால், அதே சமயம், இடிக்கப்பட்ட கட்டடம் அதன் உரிமையாளரால் மீண்டும் கட்டமைக்கப்பட்டது எந்த இடைஞ்சலும் இல்லாமல்.
வெறும் 4 மாடிக் கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு 8 மாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில்லாமல், பணி முடிப்பு சான்றிதழையும் சென்னை சில்கஸ் கட்டடம் இதுவரை பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.