நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ளது தையல்நாயகி உடனாய வைத்தியநாத சுவாமி கோயில். செவ்வாய் பரிகாரத் தலமான இக்கோயிலில், செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய் கிரக அங்காரக பகவான் ஆகியோர் தனி சன்னிதிக் கொண்டு காட்சியளிக்கின்றனர்.
இக்கோயிலுக்கு, திரைப்பட நடிகர் சூர்யா புதன்கிழமை காலை வந்தார். கோயில் சிவாச்சாரியார்கள் அவரை வரவேற்றனர். பின்னர், சித்தாமிர்த தீர்த்தக்குளத்தில் தீர்த்தம் எடுத்து வழிபட்ட அவர், கற்பகவிநாயகர் சன்னிதியில் வழிபாடு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, வைத்தியநாதசுவாமி சன்னிதி, தையல்நாயகி அம்பாள் சன்னிதி, செல்வமுத்துக்குமாரசாமி சன்னிதி, ஸ்ரீ அங்காரக பகவான் சன்னிதி ஆகிய சன்னிதிகளில் அர்ச்சனைகள் செய்து, வழிபாடு மேற்கொண்டார். கல்யாணம் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.
பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் தேவஸ்தான அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு, தேவஸ்தான கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் பிரசாதம் அளித்து, ஆசி வழங்கினார்.