அவல நிலையில் பாரதியார் பல்கலைக்கூடம்!
பல ஆண்டுகளாக நிரந்தர அல்லது பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படாததால், புதுவை பாரதியார் பல்கலைக்கூடம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக நிரந்தர அல்லது பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படாததால், புதுவை பாரதியார் பல்கலைக்கூடம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஆன்மிக, கலாசார, சுற்றுலாத் தலமாக உள்ளது. கலை மற்றும் இசைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கலை, பண்பாட்டுத் துறை மூலம் புதுவையில் தொடக்கத்தில் கம்பன் கலை அரங்கில் பாரதியார் பல்கலைக்கூடம் கடந்த 1987-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தென்னிந்தியாவிலேயே இசை, நடனம், சிற்பக் கலை போன்ற முக்கலைகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு போன்ற பல்வேறு கலைகளில் இளநிலை பட்டம் வழங்கப்படுகிறது.
30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தக் கல்லூரிக்கு, சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டு வருகிறது.
புதுவையை அடுத்து அரியாங்குப்பத்தில், தென்னை மரங்கள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பிரமாண்டமான வளாகத்தில் அமைந்துள்ள இந்தப் பல்லைக்கூடத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
முதல்வர் இல்லாத அவலம்: இந்தக் கல்லூரியில் பல ஆண்டுகளாகத் தகுதி அடிப்படையில் நிரந்தர முதல்வரோ அல்லது பொறுப்பு முதல்வரோ நியமிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால், கல்லூரி பலவிதத்தில் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் 26 பேர், தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் 6, தாற்காலிக விரிவுரையாளர்கள் 4, தவில், நாகஸ்வர பயிற்றுநர்கள் 2, மாலை நேரப் பயிற்றுநர்கள் 5, நூலகர் ஒருவர் என 44 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர 62 ஊழியர்களும் உள்ளனர்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், 106 மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர்.
இசைப் பிரிவில் 30, நாட்டியப் பிரிவில் 30, கலைப் பிரிவில் 30 என மொத்தம் 90 பேர் ஆண்டுதோறும் சேர்க்கப்பட வேண்டும்.
குறைந்து வரும் சேர்க்கை: ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சேர்க்கை தொடர்பாக விளம்பரம் செய்யப்படுவதில்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கூடம் இருப்பது தெரியாமல் உள்ளது.
பொறுப்பு முதல்வரை நியமிக்கவும் கலை, பண்பாட்டுத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கல்லூரி நிர்வாகம், கல்வி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கூட ஊழியர் நலச் சங்கத் தலைவர் செல்வம் கூறியதாவது:
முதல்வர் இல்லாததால் கல்லூரியில் நிர்வாகச் சிக்கல் உள்ளது. தற்போது நிதித் தட்டுப்பாட்டால் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை உள்ளது. வரும் மார்ச் மாதமும் இதே நிலை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
புதுவைப் பல்கலைக்கழகம் உடனே நிரந்தர அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் பாரதியார் பல்கலைக்கூடம் விரைவில் மூடப்பட்டுவிடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...