புதுதில்லி: முறையாக நியமனம் செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளதால் கட்சியின் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அதிருப்தி அதிமுக அணி தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தில்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்தார். அப்பொழுது அவருடன் சென்ற குழுவில் அவரது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம் மற்றும் அசோக்குமார் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் நண்பகல் 12 மணி அளவில் தேர்தல் ஆணையரை சந்தித்தனர். அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. எனவே அவர் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது அதிமுக கட்சி விதிகளின் படி நிச்சயமாக செல்லாது என்று தெரிவித்தனர். எனவே அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் செல்லாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்
மேலும் பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக முக்கியமான கட்சி நிர்வாகிகளான அவைத்தலைவர், நிர்வாகிகளான பொருளாளர் ஆகியோர் எங்கள் அணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்கள். எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவினர் தலைமை தேர்தல் கமிஷனரிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.