தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தேமுதிகவின் மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேமுதிக சார்பில் மே தினப் பொதுக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.குழந்தைவேல் முன்னிலை வகித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
50 ஆண்டு கால திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு அளித்த கொங்கு மண்டலத்தில் இதுவரை பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் தொழில்கள் அனைத்தும் நலிந்த நிலையில் உள்ளன. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் அழிந்துவிடும். மதுவுக்கு எதிராகப் பெண்கள் போராடி வருவது வரவேற்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் பிரச்னையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்றதாக கூறப்படும் பொது வேலைநிறுத்தம் வெற்றி அடைந்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். லோக் ஆயுக்த, லோக்பால் சட்டம் கொண்டு வந்தால் முதலில் சிறைக்குச் செல்வது திமுகவினர் தான். தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.