காவிரியின் குறுக்கே ராட்சத கிணறுகள் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் கர்நாடக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நிராகரித்து, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதற்கு மறுக்கும் கர்நாடகம், தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றது. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது.
தற்போது சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், பன்னூர் என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே ஆறு ராட்சத கிணறுகளை அமைத்து, கிணற்றின் அடியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்கக் கூடாது என்கிற உள்நோக்கத்துடன் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக அரசின் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக அரசு விசாரித்து, கர்நாடகத்தின் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.