

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.வும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றும் அருள்மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக அவரது உதவியாளர்கள் சண்முகம், அசோக்குமார் கூறியதை நம்பி, கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.40 லட்சம் வரை செந்தில், அம்பேத்கர் உள்ளிட்டவர்களிடம் வசூலித்துக் கொடுத்தேன்.
ஆனால், இதுவரை அவர்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. பணி வழங்காமல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் இந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து ஊழியர் கணேஷ்குமார் தொடர்ந்த வழக்கில், செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.