

சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவுப் பேருந்து சேவையில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் போக்குவரத்துக் கழகத்தில் மல்டி-ஏக்ஸல் ஏசி வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், தமிழகத்தில் தற்போதுதான் இது குறித்த அறிவிப்பே வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சுமார் 200 ஏசி லக்ஸரி பேருந்துகளை ரூ.42 கோடி செலவில் கட்டித்தர டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் 60 பேருந்துகளில் கழிவறை வசதியும் இருக்கும். திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றால் வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட கொண்ட பேருந்துகள் இயங்கும்.
இதில், மேற்சொன்ன 60 பேருந்துகளும் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட 40 பேருந்துகள் ரூ.8 கோடி செலவில் கட்டமைக்கப்படுகிறது.
இதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் பேருந்துகள் தயாரிப்புப் பணி தொடங்கும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எஸ்இடிசியில் சில குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தமிழகத்தில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தனியார் நிறுவனங்களே இயக்கி வருகின்றன.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 22 பணிமனைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,035 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.