

மதுரை மீனாட்சி கோயிலுக்கு அருகில் உள்ள சந்தைப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரை நகரின் மத்திய பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த விற்பனைச் சந்தை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு விட்டது. சந்தைக் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு வெற்றிடமாகக் கிடக்கிறது. சுமார் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும் என கீழடி அகழ்வாராய்ச்சிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கூறியுள்ளார்.
சங்ககால நகரங்களான பூம்புகார், கொற்கை ஆகியவை கடலுக்குள் அமிழ்ந்துவிட்டன. உறையூர் திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாக ஒடுங்கிவிட்டது. கரூர், முசிறி போன்றவை அழிந்து புதிய நகரங்கள் எழுந்து விட்டன. இவற்றில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டுமானால் பெருமளவு கட்டடங்களை இடிக்க வேண்டியிருக்கும். ஆனால், மதுரையின் மத்திய இடத்தில் அமைந்துள்ள இந்தக் காலி இடத்தில் தற்போது பலமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இம்முயற்சியை நிறுத்திவிட்டு உடனடியாக இந்த இடத்தில் தமிழக தொல்லியல் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பணி முடிவடையும் காலம் வரை எந்த வகையான கட்டடமும் அங்கு எழுப்ப தமிழக அரசு அனுமதிக்க வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.