மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூர் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
அரியலூர் அருகே மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


அரியலூர் அருகே மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மாணவி அனிதா (17) வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து, நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸார் அனிதாவின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம்: முதல்வர் உத்தரவு
அரியலூர் குழுமூர் கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட எஸ்.அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...