நீட் தேர்வு தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக (அம்மா அணி) பங்கேற்காது என்றார் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
பெரம்பலூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
நீட் தேர்வு தொடர்பாக திமுக சார்பில் அறிவாலயத்தில் திங்கள்கிழமை (செப். 4) நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். எங்களது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் அவரது சொந்த கருத்தை சொல்லி இருக்கலாம். அது, அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
எடப்பாடி குழுவினருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்தால், மத்திய அரசுக்கு இருக்கும் நல்ல பெயர்கூட கெட்டுவிடும்.
எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் போராளிகள். அவர்களுக்கு ஆதரவாகதான் நான் இருக்கிறேன். எனக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. அவர்களுக்கு என் மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்து வரும் முதல்வர் எடப்பாடியையும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் நீக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
தமிழக மக்களின் கவனத்தை, குறிப்பாக ஆளுநரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றுதான் அவர்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கிறார்கள். சொந்த வேலை காரணமாக அவர்கள் ஊருக்கு சென்று வருவார்கள்.
நான் மீண்டும், மீண்டும் தெரிவிக்கிறேன். இன்றைக்கு நடைபெறும் அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். நாங்கள் யாரை முதல்வராக பொறுப்பேற்க வைத்தோமோ, அவர் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டும் என்றுதான் கடந்த 12 நாள்களாக எங்கள் எம்எல்ஏக்கள் போராடி வருகிறார்கள்.
எங்களை பொருத்தவரை, தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சியை காப்பாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலனை காப்பாற்ற நாங்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்போம் என்றார் தினகரன்.