புதுதில்லி: தமிழகத்தின் ஆளுநராக பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவரான கல்ராஜ் மிஸ்ரா விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவரும்.முன்னாள் மத்திய அமைச்சருமான வித்தியாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். தற்பொழுது மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் அவர், தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பினை கூடுதலாக கவனித்து வருகிறார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகளும், கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஆளுநராக பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவரான கல்ராஜ் மிஸ்ரா விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தினைச் சேர்ந்தவரான கல்ராஜ் மிஷ்ராவும் முன்னாள் மத்திய அமைச்சராவார். சமீபத்தில் அவர் தன்னுடைய பதவியினை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தற்பொழுது சீனா மற்றும் மியான்மர் சுற்றுப் பயணத்தில் உள்ளதால், அவர் திரும்பியதும் இது தெடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.