சென்னை: முதல்வர் பழனிசாமி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது.
பொதுக்குழு மேடையில் அம்மா - புரட்சித் தலைவி அம்மா என்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்குத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பிறகு, அதிமுக பொதுக்குழுவில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, காப்போம் காப்போம் கட்சியை காப்போம் என பொதுக்குழுக் கூட்டத்தில் முழக்கம் எழுந்தது.
பிறகு உறுப்பினர்களை வரவேற்று, அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வளர்மதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில் 2வது முறையாக பொதுக்குழுவைக் கூட்டியுள்ளோம். அதிமுகவைக் காப்பாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னபாடுபட்டார் என்பது தொண்டர்களுக்குத் தெரியும்.
ஆட்சியைக் கலைப்போம் என கூறுபவர்கள் ஜெயலலிதாவை என்னப்பாடுபடுத்தியிருப்பார்கள். ஆட்சியை வீழ்த்துவோம் என்று கூறுபவர்களிடம் சுயநலத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என்று கூறுபவர்கள் துரோகிகள் என்று பேசினார்.
பிறகு, மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.