/

ஏற்காட்டில் 130 ஆண்டுகள் பழைமையான செப்புப் பட்டயங்கள் கண்டெடுப்பு

ஏற்காட்டில் 130 ஆண்டுகள் பழைமையான செப்புப் பட்டயங்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image

130 ஆண்டுகள் பழைமையான செப்பு பட்டயங்கள்.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:14 pm

ஏற்காட்டில் 130 ஆண்டுகள் பழைமையான செப்புப் பட்டயங்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மோகநாட்டில் உள்ள நார்த்தஞ்சேடு கிராமத்தில் இரண்டு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் பெருமாள், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீராசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நார்த்தஞ்சேடு கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள பொன்னாச்சியம்மன் கோயிலில் இரண்டு செப்புப் பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
அது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பத்திரங்கள் போல், பழங்காலத்தில் செய்திகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ சில உரிமைகளைக் கொடுக்கும்போது, அவை செப்புப் பட்டயங்களில் எழுதப்பட்டு, அவற்றின் பிரதிகள் அந்தக் குடும்பத்திடம் கொடுக்கப்படுகிறது.
நார்த்தாஞ்சேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் தெலுங்கு மொழியில் உள்ளன. காஞ்சிபுரம் பேராசிரியர் சங்கரநாராயணன் மூலம் இவை படிக்கப்பட்டு, பொருள் அறியப்பட்டது.
முதல் செப்புப் பட்டயத்தில் மதே ராமானுஜாய நம எனத் தொடங்குகிறது. தெலுங்கு மொழியில் 24 வரிகளில் செப்புப் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. 130 ஆண்டுகளுக்கு முன்பு சர்வஜித் ஆண்டு ஆடி 31-ஆம் தேதி திங்கள்கிழமை எழுதப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை நார்த்தஞ்சேடு கிராமத்தில் உள்ள மலையாளி இன மக்களான செங்காத்த கவுண்டர், நாட்நாட கவுண்டர், ஆடகார கவுண்டர், சின்னா கவுண்டர் மற்றும் இவர்களின் வம்சத்தினரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இவர்கள் அனைவரும் திருப்பதிக்குச் சென்று திருமலை வகையறாவைச் சேர்ந்த முதல் ஆச்சாரியார் வேங்கட கிருஷ்ணாசாரியின் மகன் வேதாந்தாசாரியனிடம் சங்கு சக்கர முத்திரையைச் செய்து அதை உடலில் குத்திக் கொண்டுள்ளனர். அதற்கு கட்டணமாக ரூ.5 கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
இரண்டாவது பட்டயம் 1890-ஆம் ஆண்டில் 9 வரிகளில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.