முன்றில் இலக்கிய அமைப்பு' சார்பில் எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாதெமியின் சிற்றரங்கில் ஏப்.16-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு மா.அரங்கநாதனின் மகன் நீதிபதி அரங்க.மகாதேவன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இலக்கியப் பங்களிப்புக்காக கவிஞர் ரவி சுப்பிரமணியன், ஆராய்ச்சி-கவின்கலை-மொழி-விமர்சனம்-மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்காக கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
விருது பெறுபவர்கள் பற்றிய உரையை ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், விருது பற்றிய அறிமுக உரையை கவிஞரும், சிறுகதை ஆசிரியருமான ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர். எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவுரையை நாவலாசிரியர் சோ.தர்மன் நிகழ்த்த உள்ளார். கவிஞர் அகரமுதல்வன், ஜி.ஆர்.தேவராஜன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.