கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரத்தில், அரசிடம் நிவாரண நிதி பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க பெண் நிர்வாகி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராயபுரம் பனைமரத்தொட்டி அம்மன் கோயில் முதல் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி அமுதா (42), அறிஞர் அண்ணா பெண்கள் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவி. எண்ணூர் அருகே நடுக்கடலில் கடந்தாண்டு இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் டான் காஞ்சிபுரம் கப்பல் சேதமடைந்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து வெளியேறியது.
கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்ததால், அந்தப் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் சிக்கியது. அப்பகுதியில் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அரசு அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் அமுதா, அந்த நிவாரண நிதியை தான் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 500 பேரிடம் பணம் வசூலித்துள்ளாராம். பணத்தை பெற்றுக் கொண்ட அமுதா, யாருக்கும் நிவாரண நிதி பெற்றுக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பணத்தை இழந்த, ராயபுரம் அம்மன் கோயில் முதல் சந்துப் பகுதியைச் சேர்ந்த ரா.திலகவதி (65) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதனை அண்மையில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆணையர், ராயபுரம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, ராயபுரம் போலீஸார் அமுதா மீது வழக்குப் பதிவு செய்து, அவரை திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் மோசடி குறித்து விசாரணை செய்த போலீஸார், பின்னர் நீதிமன்றத்தில் அமுதாவை ஆஜர்படுத்தி, புழல் சிறைக்கு அனுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.