சேலம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமின்போது, ஆட்சியர் தலை மீது காலணியை வைக்க முயன்ற முதியவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த முகாமின்போது மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டிருந்தார். அப்போது வரிசையில் வந்த 60 மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று தனது காலில் அணிந்திருந்த காலணியை தூக்கிக் கொண்டு, ஆட்சியரின் தலை மீது வைக்க சென்றார்.
உடனே ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சற்று தள்ளி சென்றார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமாரின் தலை மீது காலணியை வைக்க முயன்ற முதியவர் தள்ளிவிடப்பட்டார்.
உடனே அங்கிருந்த அரசு அலுவலர்கள் சிலர் முதியவரை தாக்கினராம். இதையடுத்து, போலீஸார் முதியவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அப்போது அவர் ராசிபுரம் கச்சநாச்சம்பட்டியைச் சேர்ந்த கே.ஆறுமுகம் (57) என்பது தெரியவந்தது. தான் செருப்படி சித்தர் என்பதால் ஆசிர்வாதம் செய்வதற்காகவே ஆட்சியரின் தலை மீது காலணியை வைக்க முயன்றதாகவும் ஆறுமுகம் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமின்போதும், காலணியை எடுத்து ஆசிர்வாதம் செய்ய முயன்றதாகப் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.