பருவ மழைக் காலம்: சென்னையில் வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியீடு

தென்மேற்குப் பருவ மழைக் காலம் முடிந்து விரைவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ளது.
பருவ மழைக் காலம்: சென்னையில் வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியீடு
Updated on
2 min read


சென்னை: தென்மேற்குப் பருவ மழைக் காலம் முடிந்து விரைவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெய்த பெரும் மழையைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சென்னை மாநகரத்தின் பெரும் பகுதி வெள்ளத்துக்கு இரையானது.

தமிழகத்துக்கு அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், 2015ம் ஆண்டு வெள்ளத்தை அடிப்படையாக வைத்து சென்னையில் அதிகப்படியான மழை பெய்தால் வெள்ளம் தேங்கும் பகுதிகளை தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கண்டறிந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 306 இடங்கள் வெள்ளம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 37 இடங்கள் அதிக வெள்ள அபாயம் கொண்ட பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை வாரியம், சென்னை வரைபடத்தில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை, 5 அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கும் பகுதிகளை மிக அதிக அபாயம் கொண்ட இடங்களாகவும், 2 அல்லது 3 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கும் பகுதியை அதிக அபாயம் கொண்ட இடங்களாகவும், 2 அடிக்கு வெள்ளம் தேங்கும் பகுதியை அபாயம் கொண்ட இடங்களாகவும், 2 அடிக்குக் குறைவான அளவில் வெள்ளம் தேங்கும் பகுதிகளை குறைந்த அபாயம் கொண்ட இடங்கள் எனவும் 4 வகையாகப் பிரித்துள்ளது.

குறிப்பாக 37 இடங்கள் மிக அதிக வெள்ள அபாயம் கொண்ட பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அடையாறு மண்டலத்தின் கீழ் வரும் கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உட்பட 24 இடங்களும் அடங்கும். அது மட்டுமல்ல 306 வெள்ள அபாயம் கொண்ட பகுதிகளில் 67 பகுதிகள் அடையாறு மண்டலத்தைச் சார்ந்தவையாக உள்ளன.

கடந்த 2015 வெள்ளத்தின் போது வெள்ள நீரானது 1,500 மீட்டர் தூரம் பயணித்து ஆலந்தூர் தாலுகாவின் கீழ் வரும் மனப்பாக்கம் கிராமம் வரையிலும், அடையாறு நதி அதிகபட்சமாக 3000 மீட்டர் பயணித்து ஜாஃபர்கான்பேட்டை வரையிலும் பரவியது.

அதே போல, தேனாம்பேட்டை மண்டலத்தில் வரும் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் ஆர்.ஏ. புரம் ஆகிய பகுதிகளும் மிக அதிக வெள்ள அபாயம் கொண்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

வெள்ளம் அதிகம் பாதிக்கும் 306 இடங்களில் தேனாம்பேட்டை மண்டலத்தைச் சேர்ந்த 65 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதே போல வளசரவாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த 26 பகுதிகளிலும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக அறியப்பட்டுள்ளது.

37 இடங்கள் மிக அதிக வெள்ள அபாயம் கொண்ட பகுதிகளாக உள்ளன. அவை..


திருவொற்றியூர் 
மாதவரம்
அண்ணாநகர்
வளசரவாக்கம்
நெற்குன்றம்
மதுரவாயல்
காரம்பாக்கம்,
ராமாபுரம்
வளசரவாக்கம் மற்றும் போரூர்
அடையாறு
கிண்டி
வேளச்சேரி
திருவான்மியூர்
தேனாம்பேட்டை
நுங்கம்பாக்கம்
ஆயிரம் விளக்கு
மையிலாப்பூர்
ராயப்பேட்டை
ஆர்.ஏ புரம்
திருவல்லிக்கேணி
சேத்துப்பட்டு
ஆழ்வார்பேட்டை
சாந்தோம் ஆகிய பகுதிகள் அடங்கும்.

அதிக வெள்ளம் பாதிக்கும் பகுதிகளின் பட்டியலில் (84 இடங்கள்) - மண்டலங்கள் வாரியாக : 

தேனாம்பேட்டை (20 இடங்கள்)
அடையாறு (17 இடங்கள்)
வளசரவாக்கம் (13 இடங்கள்)
திருவொற்றியூர் (7 இடங்கள்)
மாதவரம் (6 இடங்கள்)
தண்டையார்பேட்டை (7 இடங்கள் - ஆர்.கே. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி, பெரம்பூர் உட்பட)
சோலிங்கநல்லூர் (3 இடங்கள்)
கோடம்பாக்கம் (9 இடங்கள் - வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், எம்ஜிஆர் நகர் உட்பட)
ராயபுரம் (1 இடம்)
அண்ணாநகர் (1 இடம்) என மொத்தம் 84 பகுதிகள் அதிக வெள்ள அபாயம் கொண்ட இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com