
மதுரை: கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய பலியான இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, ஹெச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள அவர், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், வயிற்றில் உள்ள குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரத்தில் விஷம் அருந்திய இளைஞர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே ஞாயிறு காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீசில் அவர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும் என்றும், உடற்கூறு ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதுபற்றி மருத்துவமனை டீனிடமும் அவர் தனியாக மனு அளித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.