'கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்பை உருவாக்க வேண்டும்'

நகரங்களுக்கு குடிபெயர்வதைத் தவிர்க்க, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று குறு, சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கூடுதல்
Updated on
1 min read

நகரங்களுக்கு குடிபெயர்வதைத் தவிர்க்க, கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று குறு, சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கூடுதல் தொழில் ஆலோசகர் எஸ்.சிவஞானம் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக பாரதிய யுவ கேந்திரா அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், வணிக யோசனை போட்டியை இந்த அமைப்பு நடத்தவுள்ளது. போட்டியில் சிறப்பாக யோசனை வழங்கும் 3 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கபடவுள்ளது.
இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை கிண்டி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) வளர்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை குறு, சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கூடுதல் தொழில் ஆலோசகர் எஸ்.சிவஞானம் தொடங்கிவைத்து பேசியது:
தொழில் முனைவோரை உருவாக்குவது, பிரபலப்படுத்துவது தான் எல்லோருடைய முக்கியப் பணியாக உள்ளது. பொருளாதார அதிகாரம், வேலைவாய்ப்பை அளித்தல் ஆகிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக குடிபெயர்தல் உள்ளது.
குடி பெயர்தலை தடுக்க கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்க வேண்டும். குறிப்பாக, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில் நிறுவனங்களைப் பிரபலப்படுத்த வேண்டும். உணவு பதப்படுத்தல் தொழில், தோட்டக்கலை தொழில், வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வருவதுடன் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதன்மூலம் குடிபெயர்தல் தவிர்க்கப்படும். கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி அடையும். விவசாயமும் மேம்படும். இதற்கான நிதியை பெரு நிறுவனங்கள் அளித்து உதவலாம். பெருநிறுவனங்கள் தங்களின் சமூகப்பணிக்கான நிதியை கிராமப்புற தொழில் வளர்ச்சிக்கு செலவிட்டால், கிராமங்கள் வேகமாக வளர்ச்சி பெற்றுவிடும் என்றார் அவர். நிகழ்ச்சியில், மாநில தொழில் வணிகத் துறை இணை இயக்குநர் கியாஸ், பாரதிய யுவகேந்திரா டிரஸ்ட் சென்னை பிரிவு தலைவர் சி.என்.பிரேம் குமார், ஆலோசகர் ஷியாம் சேகர் உள்பட பலர் பேசினர்.
வணிக யோசனை போட்டி: பாரதிய யுவகேந்திரா டிரஸ்ட் சார்பில், நடைபெறும் இந்த வணிக யோசனை போட்டியில் விண்ணப்பிக்க பிப்ரவரி 24-ஆம் தேதி கடைசி நாள். இது தொடர்பான விவரங்களுக்கு செல்லிடப்பேசி எண்கள் 96770-40509, 87544-66655 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com