கன்னியாகுமரியில் சூறைக்காற்று காரணமாக 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த இருநாள்களாக சூறைக்காற்று வீசி வருவதால் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் பலத்த கடல்காற்று வீசியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல் காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. ஆனால், காற்றின் வேகம் அதிகரித்ததால் 9 மணிக்கு படகுப் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மேல் காற்றின் வேகம் தணிந்ததால் 2.30 மணி முதல் மாலை 4 மணிவரை படகுகள் இயக்கப்பட்டன. திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
முக்கடல் சங்கமத்தில் குளிக்கத் தடை: கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்வது வழக்கம். கடல் சீற்றம் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.