சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறப்பதற்கு விஜயதரணி ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது இல்லை என திமுக, காங்கிரஸ் கூட்டணி எடுத்த முடிவாகும். இது தொடர்பாக காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவின்படி விஜயதரணியும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், நிகழ்ச்சிக்குப் பிறகு பேரவைத் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைத்திருப்பதை வரவேற்றுள்ளார். விஜயதரணி கூறிய கருத்துகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.