தமிழ்நாடு
சென்னை தனியார் விடுதியில் ஃபின்லாந்து இளம்பெண் மர்ம மரணம்
சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் ஃபின்லாந்து நாட்டு இளம்பெண் மர்ம முறையில் புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
சென்னை நகரின் பிரதான திருவல்லிக்கேனி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது காதலருடன் அந்த தனியார் விடுதியில் செவ்வாய்கிழமை முதல் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவரது காதலர் கண்டபோது அந்த பெண் சுயநினைவு இன்றி இருந்ததாகவும், உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.