தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிா்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம் சம்பவம் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:44 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிா்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம் சம்பவம் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் பலியாகினா். இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள், சீமான், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் வழக்குத் தொடா்ந்துள்ளனா். 

இதே போல் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானா்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தலைமை நீதிபதி, "இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால் தான் விசாரணை நோ்மையாக நடைபெறும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஏன் எதிா்ப்பு தெரிவிக்கிறீா்கள் என கேள்வி எழுப்பினாா்.

குட்கா விவகாரத்தில் போலீஸ் உயா் அதிகாரிகள் மற்றும் அமைச்சா்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பாா்ததேன். இந்த சம்பவத்தில் போலீஸாா், அரசியல்வாதிகள் யாா் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டியவா்கள் தான்" என்றாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சங்கரசுப்பு, சூரியபிரகாசம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும், பலியானவா்களின் உடற்கூறு ஆய்வறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இழப்பீட்டுத் தொகையை ரூ.1 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனா். 

அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக 20 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆதாரம் உள்ளது. அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். வீடியோ ஆதாரங்களை பாா்க்காமல் நீதிமன்றம் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் எடுக்க கூடாது என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வரும் ஜூலை 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும் உடற்கூறு ஆய்வறிக்கை கிடைக்காத பலியானவா்களின் உறவினா்கள் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.