
உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தரக்குறைவாக நடத்தப்பட்டதாக போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வேல்முருகன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரை புழல் சிறையில் சென்று நேரில் சந்தித்தார். அதன்பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, காவிரி போராட்டத்தின் போது அவர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்வதாக கூறி அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால், அவரை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஒருவர் தீக்குளித்து இன்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்தார்.
இதையடுத்து, வேல்முருகன் மீது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜூன் 5-ஆம் தேதி மதிமுக மற்றும் தோழமை கட்சிகள் அறப்போராட்டம் நடத்தப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.