ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி?
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பிரசுரித்திருந்தார்.


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பிரசுரித்திருந்தார்.
அந்த கவிதையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டையும், திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாததால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
அந்த கவிதையில், தாங்கள் இல்லாததால், இப்படியெல்லாம் நடக்கின்றதே என்ற வேதனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, ஒரு மகளாய், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவராய் பார்த்தால் வேதனையான விஷயம்தான் என்றாலும், தற்போது திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்டாலின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடா என்ற சந்தேகமும் எழுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாகக் கூறி, அதன் தாக்கமே கவிதை முழுக்க பரவியிருப்பதாக நாம் நினைத்தாலும், இது சகோதரர் ஸ்டாலினின் தலைமை மீதான அதிருப்தியின் வெளிப்பாடுதான் என்கிறார்கள் சிலர் கருதுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக,
'ஊர்கூடி வடமிழுக்கிறோம்,
தேர் நகரவில்லை
கைகள் சோர்ந்து
நம்பிக்கை இற்று விழும்முன்
வா!' என்ற வார்த்தைகள் ஏதோ கட்சியின் தற்போதைய நிலையை மறைமுகமாக உணர்த்துவதாகவும் உள்ளது என்கிறார்கள்.
அவர் மறைமுகமாக சொல்லிவிட்டார். பலரால் சொல்ல முடியவில்லை. ஒரு பலமான தலைமையை எதிர்பார்க்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் திமுக அப்படியே தான் உள்ளது. எந்த முன்னேற்றமும் அடையவில்லை. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதைத் தவிர, அரசியலில் வேறு எதையும் செய்யவில்லை என்கிறார்கள் திமுகவை மிக நெருக்கமாக கண்காணிக்கும் நபர்கள்.
பொதுவெளியில், திமுகவுக்கு ஸ்டாலினின் தலைமையை கனிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார். ஒற்றுமையாக இருப்பதாக இருவரும் அவ்வப்போது காட்டிக் கொள்வதும் உண்டு. ஆனால், கனிமொழியின் இந்த உணர்வுப்பூர்வமான கவிதை சில தமிழ் நாளிதழ்களில் வெளியானது. ஆனால், திமுகவின் நாளிதழான முரசொலியில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சரி.. கனிமொழியின் முழுக் கவிதையையும் படிக்க வேண்டாமா? இந்த கவிதையில் கனிமொழியின் அதிருப்தி எங்காவது வெளிப்பட்டிருக்கிறதா என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.
அதில்,
நீ இல்லா தெருக்களில்
உன் உடன்பிறப்புகளின் குருதி
ஆறாய் ஓடுகிறது.
உயிரற்ற உடல்களை
பழந்துணி போல்
இழுத்து வருகிறார்கள்.
கிடத்தப்பட்ட உடல்களை
வட்டமிடும் கழுகுகள்.
உணர்வற்ற உடலில்
தன் பங்கு தேடும் ஓநாய்கள்.
தெருவெங்கும் இரத்தம்.
சாதி மதம் கடந்து
கலந்து காய்ந்த இரத்தம்.
ஊர்கூடி வடமிழுக்கிறோம்,
தேர் நகரவில்லை
கைகள் சோர்ந்து
நம்பிக்கை இற்று விழும்முன்
வா!
உன் கரகரத்த குரல்
வாளெடுத்து
எழுத்து கேடயம் ஏந்தி வா!
வீதிகளெங்கும் காத்திருக்கிறோம்
ரட்சகனுக்காக.
என்று கனிமொழி தனது கவிதையை முடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...