
சென்னை: வழக்கம் போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதித் தள்ளுவார்கள் என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா மரணம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த பெருவளூர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா (18). கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று, பொதுத் தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர ஆர்வமாக இருந்த அவர், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார்.
அதில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனினும், அவர் மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார்.
அதன்படி நிகழாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக 39 மதிப்பெண் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மனமுடைந்த மாணவி, விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வழக்கம் போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதித் தள்ளுவார்கள் என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா மரணம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
#நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள். வழக்கம் போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடம் நம் உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.