புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தார். மாநாட்டில் பங்கேற்ற அவர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜாவடேகர், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்தித்தார். குடியரசுத் தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.
தில்லி சாணக்கியபுரி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர், வியாழக்கிழமை காலை தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்றார். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை பிரதமருடன் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சூழல் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஆளுநர் பன்வாரிலால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தில்லி வந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களைப் படிப்பில் கவனம் செலுத்துமாறும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறும், தெய்வபக்தியுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு, மாலையில் புது தில்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








