தூத்துக்குடி விசாரணை ஆணையம் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா?: உயர் நீதிமன்ற கிளை  கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளதா என்று அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை  கேள்வி எழுப்பியுள்ளது. 
தூத்துக்குடி விசாரணை ஆணையம் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா?: உயர் நீதிமன்ற கிளை  கேள்வி
Published on
Updated on
1 min read

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளதா என்று அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை  கேள்வி எழுப்பியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின் பொழுது, மே 22 முதல் 24-ந் தேதி வரையிலான மூன்று நாட்களில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையில் அரசு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன் வழக்குத் தொடுத்திருந்தார்.

அவரது மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

சட்டம் ஒழுங்கு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தனித்தனியாக விசாரணை செய்ய உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையால் தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. எப்படி ஒரு முன் முடிவுக்கு வர முடியும்?

அத்துடன் துப்பாக்கி சூடு சம்பவம் மே 22, 23, 24 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. ஆனால்  அரசாணையில் மே 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டினைப் பற்றி மட்டுமே விசாரிக்க நியமனம் செய்யபட்டுள்ளது. மே 23 மற்றும் 24-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

மேலும் ஒரு விசாரணை கமிஷனில் அந்த சம்பவம் தொடர்பான பொது அறிவு பெற்ற அதிகாரிகளும்  ஆணையத்தில் இருக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இந்த அரசாணையில் இசம்பவம் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடபாக நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த மனுவானது வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரிப்பதற்கு உகந்ததாக ஏற்றுக் கொண்ட  நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com