டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் கடந்தாண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அமர்வு ஜூன் 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில் 2 நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இந்த தீர்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் விமர்சித்ததாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். அதிலும், தங்கதமிழ்செல்வன் மட்டும் உச்சநீதிமன்றத்தை நாடவில்லை.
இந்நிலையில், 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி வழங்கிய தீர்ப்பை தங்கதமிழ்செல்வன் விமர்சித்ததாக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு தங்கதமிழ்செல்வன் 2 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்.