

சென்னை: நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, காப்பீடு நிறுவனங்கள் அல்ல என்று நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சந்தீப் குமார் ரங்கா என்பவர் தனது மருத்துவ செலவை திருப்பி அளிக்க மறுத்த அப்பல்லோ முனிச் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஜெயபாலனுக்கு காப்பீடு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சந்தீப் குமார் ரங்க அப்பல்லோ முனிச் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு எடுத்துள்ளார். இந்த நிலையில், 2015ம் ஆண்டு ரங்காவுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டு, மின்ட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பணமில்லா சிகிச்சை அளிக்க சந்தீப் குமார் வலியுறுத்தியும், அந்த வசதி கிடைக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், மருத்துவ செலவுத் தொகையை திருப்பிக் கேட்டு ரசீதுகளை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பினார். ஆனால், சந்தீப் குமார் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், நோயைக் கண்டறியவே அனுமதிக்கப்பட்டார் என்றும், அதனால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படாது என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து சந்தீப் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம், இழப்பீடு தொகை குறித்து காப்பீட்டு நிறுவனம் விசாரணை செய்யலாம். ஆனால், ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தவறு என்று, அவரது விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியானதல்ல என்று தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.