சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரும் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்கள்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தொடர் விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர்,, தேடுதல் வேட்டை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 18 இளைஞர்களை கைது செய்தனர்.
தற்பொழுது மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரும் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்ட 18 பேரில் 5 பெண்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.