காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுன்னம்பேடு காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுலகத்தில் பணியாற்றி வருபவர் சிற்றரசு. இவருக்கும் ஜெகன் என்பவருக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. செவ்வாயன்று இருவருக்கும் இடையே மீண்டும் துவங்கிய வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக உருவெடுத்தது.
பின்னர் ஜெகன் சுன்னம்பேடு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார். அது தெடர்பான விசாரணைக்காக ஆஜராகுமாறு செவ்வாய் இரவு சிற்றரசுவை போலீசார் அழைத்துள்ளனர். அவர் அங்கு சென்ற சிறிது நேரத்தில், காவல் நிலையத்தில் சிற்றரசு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அவரது வீட்டுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் இதனை ஏற்காத சிற்றரசுவின் குடும்பத்தினர் போலீசார் அவரை கொன்று விட்டதாகக் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரால் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.