சென்னை: மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் ஒருவர் மீது அவசர கதியில் பாய்ச்சப்பட்ட குண்டர் சட்டம் பற்றிய வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
மணல் கடத்தலில் ஈடுபட்ட குறிப்பிட்ட லாரி ஓட்டுநர் மீது போதிய தெளிவு இன்றி குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இன்றி மணல் கடத்தல் நடைபெற முடியாது. அப்படியென்றால் மணல் கடத்தலுக்கு உதவிய அரசு அதிகாரிகள்மீது இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
இனி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.