சட்டம் ஒழுங்கைக் காப்பதில் அதிமுக அரசு அலட்சியமாகச் செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வட மாநிலங்களில் எப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழல் பெண்களுக்கு ஏற்பட்டதோ அதே நிலை தமிழகத்திலும் காலூன்றத் துவங்கியுள்ளது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய ஒன்று.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொடூரமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட போதும், இந்தக் கொடூர குற்றத்தைச் செய்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்தியதாக செய்திகள் வந்தபோது, அதற்கு கடும் கண்டனங்கள் எழும்பிய பின்னர்தான் வேறு வழியின்றி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை தாமதமாக நடக்கும்போது, குற்றங்கள் எப்படி குறையும்?
தொடர்ச்சியாக பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொடூர கொலைகளும், சங்கிலி பறிப்பு சம்பவங்களும், தமிழகத்தில் நடந்து வருவதை பத்திரிகை ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. போதுமான சட்டங்கள் இருந்தும்கூட, சட்டத்தை செயல்படுத்தக்கூடிய மன நிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படவேண்டிய பிரச்னைகளை மிகவும் மேம்போக்காக கையாளும் அதிமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






