வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி:
வரும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை முடிவெடுக்கும். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகுவீர்களா என கேட்கிறீர்கள். யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடுக்கலாம். ஆனால், வழக்கின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். யார் மனுக் கொடுத்தாலும், பதவி விலக வேண்டும் என்றால், தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் யாருமே பதவியில் இருக்க முடியாது.
அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் 93 சதவீத இடங்களை வென்றுள்ளோம். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்களின் செல்வாக்கை நாங்கள் இழந்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்களா? வேண்டுமென்றே திட்டமிட்டு சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் நாங்கள் செல்வாக்கு இழந்து விட்டதாக பரப்புரை செய்கின்றன.
டிடிவி தினகரன் ஊடகங்கள் வாயிலாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஊடகங்களை அழைத்து தெளிவுபடுத்திவிட்டார். இந்த விவகாரத்தில் இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
பெட்ரோல், டீசல் விலை குறைக்க பரிசீலினை: தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டு, 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில், ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் கூடுதல் நிதி ஆதாரங்களை உருவாக்கி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் தடுப்பணை கட்டப்படுமா என கேட்கிறீர்கள். காவிரி ஆற்றுப் பகுதியில் எந்த அணை கட்டப்படுவதாக இருந்தாலும், அதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இசைவு தந்தால்தான் கட்டமுடியும். நாம் தடுப்பணை கட்டத் தயாராக இருந்தாலும் கர்நாடக அரசு அதற்கு அனுமதி கொடுக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கேட்டு வருகின்றனர். அதற்கான அனுமதியை அளிக்கக் கூடாது என்று பிரதமரிடம் நான் வலியுறுத்தி உள்ளேன். மேலும், மேட்டூர் அணையின் கீழ் பகுதியிலிருந்து தஞ்சாவூர் வரை உள்ள ஆற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுவது தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம் என்றார் முதல்வர்.
எம்பிக்களுடன் ஆலோசனை: திங்கள்கிழமை மாலையில் தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிமுக எம்பிக்கள் 28 பேர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்பிக்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.
புதிய அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆய்வு: பின்னர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தில்லி சாகேத் பகுதியில் 3 தளங்கள் கொண்ட அ.தி.மு.க. அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது முதல்வருடன் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

திருவள்ளுவா் சநாதனிதான்: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ், சுகேஷ் உள்பட 17 போ் மீது குற்றச்சாட்டு பதிய உத்தரவு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



