40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எம்.அல்லி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள், மருத்துவர் உறவு மேம்படுதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் தடுப்பு குறித்து பொது அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் எம்.அல்லி பேசியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் ஆகியவற்றால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இளம் வயதில் பருவமடைதல், 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது, 50 வயதுக்கு மேல் மாதவிடாய் சுழற்சி நிற்காமல் இருப்பது, ஹார்மோன் மாத்திரைகளை நீண்டகாலமாக உட்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.
மார்பகத்தின் தோற்றத்தில் மாற்றம், வலியில்லாத கட்டி, அக்குலில் கட்டி ஆகிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 50 -க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர்.