தமிழறிஞரும், நூற்றாண்டு கடந்த நுண்ணறிவாளர் என போற்றப்பட்டவருமான லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் (104) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்.14) காலமானார்.
அவருக்கு அடக்கம்மை ஆச்சி என்ற மனைவி, 3 மகன்கள், 4 மகள்கள் ஆகியோர் உள்ளனர்.
பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையில் ஓர் ஆலமரமாகத் திகழ்ந்தவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் உள்பட பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர். பாடத்திட்டம், ஆட்சிக்குழு, பாடத் திட்டக்குழு என பல்வேறு குழுக்களுக்கு தலைமை வகித்துள்ளார். மேலும் தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் 60-ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருந்துள்ளார்.
கடந்த 1944-இல் தமிழிசைக் கல்லூரி உருவாக பெரும் பங்களிப்பை அளித்தவர். 'நோக்கு', 'சோழ வேந்தர் மூவர்', 'சங்க காலத் தமிழர் வாழ்வு' முதலிய பல நூல்களை அவர் எழுதியுள்ளார். மறைந்த இராமநாதன் செட்டியாரின் இறுதிச் சடங்குகள் திருவொற்றியூரில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.15) நடைபெற்றன. தொடர்புக்கு: 94866 81801.