ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை- உயர் நீதிமன்றம்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையில்லை- உயர் நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்பல்லோ தரப்பில் முன் வைக்கப்பட்ட 2  கோரிக்கைகள் தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 21 துறைகளைச் சேர்ந்த குழுக்களை அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற அப்பல்லோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பத் தடை விதிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்ட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீதம் விசாரணை முடிந்துவிட்டதால் ஆறுமுசாமி ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்த ஆணையம் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இந்த ஆணையம் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தத் தடை கோரியும், 21 துறை நிபுணர்களின் குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக இந்த மனு தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

 அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 18 ஆலோசகர்கள், 6 எய்மஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனையின் 12 சிறப்பு மருத்துவர்கள் உள்பட பலர் சிகிச்சை அளித்தனர். 

இந்த நிலையில் மறைந்த முதல்வருக்கு போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா என நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிப்பது வரம்பை மீறிய செயல் என குற்றம் சாட்டினார். மேலும் மருத்துவ நிபுணத்துவம் இல்லாத இந்த ஆணையம் நிபுணத்துவம் குறித்து விசாரிப்பது தவறானது. அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. வெளிநாட்டு மருத்துவர் ரிச்சர்ட் பீலே காணொலிக் காட்சி மூலமாகவும், 30 மருத்துவர்கள் நேரடியாகவும் சாட்சி அளித்துள்ளனர். இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க வேண்டுமே தவிர, அவருக்குப் போதுமான சிகிச்சை அளிக்கப்பட்டதா என விசாரணை ஆணையம் விசாரிப்பது ஏற்புடையதல்ல என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com