புதிய உச்சத்தில் தங்கம்: ஆவணியில் திருமணம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28,568க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவணி மாதம் திருமணம் வைத்திருப்பவர்கள், ஆடி பிறந்ததும், தங்கம் விலை குறையும், அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு எல்லாம் கடுமையான அதிர்ச்சிக் காத்திருக்கிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து 7 நாளில் ஒரு சவரன் தங்கம் விலை இரண்டு ஆயிரம் ரூபாய் அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.28,568க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து, ரூ.3,571க்கு விற்பனையாகிறது.
கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,088 அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஜூன் மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்து வந்தநிலையில் ஒரு சவரன் விலை ரூ.28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியது: சீனப் பொருள்களுக்கு மேலும் 10 சதவீதம் வரியை அமெரிக்க விதித்தது, அமெரிக்காவில் ஃபெடரல் கூட்டமைப்பு வைப்பு நிதி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தக் காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. நிகழாண்டின் இறுதிக்குள் ரூ.30 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
வியாழக்கிழமை விலை
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ரூ.3,571
1 பவுன் தங்கம் ரூ. 28,568.