நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 8 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. உதகை-மஞ்சூர் சாலை, உதகை - கூடலூர் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. உதகையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அவலாஞ்சி பகுதி மக்களை மழை மிரட்டி வருகிறது. இங்கு நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே அவலாஞ்சியில் 6ம் தேதி 40 செ.மீ., 7ம் தேதி 82 செ.மீ., 8ம் தேதி 91 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த 4 நாட்களில் வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சி மலைப்பகுதிகிளில் மட்டும் 258 செ.மீ., மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.