குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து, ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து லக்னோ உள்ளிட்ட இடங்களிலும் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.