சென்னை: நூற்றாண்டு பழைமைவாய்ந்த கட்டடமான ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது.
ரிப்பன் மாளிகைக்கு அருகே நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அல்லது கட்டடத்தை சரிவர பராமரிக்காததன் காரணமாக இந்த விரிசல் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவரவில்லை.
ஆனால், மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்ட பிறகே இந்த விரிசல் ஏற்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த விரிசலை சரி செய்யும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும், ரிப்பன் மாளிகையின் முதல் தளத்தில் இருந்து இரண்டாவது தளம் வரை இந்த விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
106 ஆண்டு கால பழைமைவாய்ந்த இந்த கட்டடத்தின் உட்புறங்களில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்தும் போது பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்கள் இந்த கட்டடத்தைக் கட்ட முடிவு செய்தனர். ஒப்பந்ததாரர் லோகநாதன் முதலியாரால் ரூ.7.5 லட்சம் செலவில் இந்த கட்டடம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.