தமிழகத்தில் எங்கும் மணல் குவாரிகள் செயல்படக் கூடாது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் செயல்படும் அரசு மணல் குவாரியைக் கண்டித்து அங்கு புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
இயற்கையின் வரப்பிரசாதமான மணலை மனிதன் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் பாறையை உடைத்து எம்.சாண்ட் மணல் தயாரிக்கலாம். மணல் மற்றும் நிலக்கரி, வயல்கள் உற்பத்தியாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. மணல்தான் நிலத்தடி நீரை உள்வாங்கிப் பாதுகாத்து, அனைத்து ஜீவராசிகளுக்கும் வழங்குகிறது. ஆனால் ஆட்சியாளர்களே அதைக் கொள்ளையடிக்கின்றனர். விவசாயி மாட்டுவண்டியில் மணல் அள்ளினால் குற்றம், ஆனால் அரசே அள்ளினால் அதற்குப் பெயர் என்ன?
திருமானூரில் மட்டும் மணல் குவாரி செயல்படக் கூடாது என்பதல்ல எங்கள் நோக்கம். தமிழத்தில் எங்குமே மணல் குவாரி செயல்படக் கூடாது என்பதற்கே இந்த ஆர்ப்பாட்டம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கொள்ளை நடைபெறவில்லை.
தமிழகத்தில் மட்டுமே இதுபோன்ற மணல் கொள்ளையில் அரசு ஈடுபடுகிறது என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.