தூத்துக்குடி: பிப்ரவரி 14ம் தேதி 2 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியில் உள்ள கிருஷ்ணவேணியின் வீட்டில் உள்ள தொலைபேசி அழைத்தது.
எடுத்துப் பேசியது கிருஷ்ணவேணிதான். அடுத்த முனையில் அவரது கணவர். மனைவியின் நலம் மற்றும் குடும்பத்தாரின் நலத்தைக் கேட்டறிந்த சுப்ரமணியம், தனது மனைவிக்கு தனது காதலர் தின வாழ்த்தைச் சொல்லியிருப்பாரா என்பது தெரியவில்லை.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுப்ரமணியம் தனது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்.
ஆம், புல்வாமாவில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வீரர் சுப்ரமணியத்தைப் பற்றியதுதான் இந்த செய்தி.
ஓராண்டுக்கு முன்புதான் கிருஷ்ணவேணி - சுப்ரமணியம் தம்பதிக்கு திருமணமானது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
சுப்ரமணியம் பற்றி அவரது தந்தை கணபதி கூறுகையில், தலைப் பொங்கல் என்பதால் ஜனவரி மாதம் ஊருக்கு வந்திருந்தான். பிப்ரவரி 10ம் தேதிதான் காஷ்மீரில் பணிக்குத் திரும்பினான்.
தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்ததும் உடனடியாக தனது மகனைத் தொடர்பு கொள்ள முயன்ற தந்தையால் மகனுடன பேச முடியவில்லை.
வெள்ளிக்கிழமை மதியம் மத்திய அமைச்சகம் உறுதிப்படுத்தும் வரை எப்படியாவது தங்கள் மகன் பிழைத்துக் கொண்டிருப்பான் என்றே உறுதியாக நம்பியிருந்ததாக கண்ணீர் விட்டு கதறுகிறார் வீரமகனின் தந்தை.
முதலில் காவல்துறையில் சேர வேண்டும் என்று விரும்பினான். பிறகு சிஆர்பிஎஃப்-ல் இணைந்தான். நாட்டுக்காக எனது மகன் தனது இன்னுயிரையே இழந்துவிட்டான் என்று ஆற்றொணாத் துயரத்தோடு மகனின் உடலுக்காக காத்திருந்தார்.