தூத்துக்குடி: புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையிலும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையிலும் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சவலப்பேரி கிராமத்துக்குச் சென்ற ஸ்டாலின், உயிரிழந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வீர மரணம் அடைந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்திலும், கூட்டுடன்காடு கிராமத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் விளாத்திகுளம் ஒன்றியம், வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் ஸ்டாலின், பின்னர், விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடைகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









