திருவாரூர்: தேர்தல் ஆணைய முடிவு தெரிந்தே அதிமுக, பாஜக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தனர் என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டி உள்ளார்.
வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, ஜனவரி 31 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தோம் என்று திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எதிர்பார்த்ததுதான். அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே கணிக்க முடிந்தது.
அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முடிவை தெரிந்துதான் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தனர். தேர்தல் ஆணையம் தன்னாட்சியோடுதான் இயங்குகிறதா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுகிறது.
திருவாரூரில் பாஜக ஆயிரம் வாக்குகளைக்கூட வாங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ரத்துக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். அவர்களுக்கு தெரிந்துதான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று பூண்டி கலைவாணன் குற்றம்சாட்டி உள்ளார்.