சென்னை: பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவரான மறைந்த பசுபதி பாண்டியனின் நினைவு தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழன்று (ஜன.10) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க மாவட்ட காவல்துறை இன்று மாலை முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருவதற்கும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அத்தடை உத்தரவில் இருந்து பள்ளி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.