பாம்பன் தூக்குப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு:  ரயில்களை இயக்க அதிகாரிகள் தயக்கம்!

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பாம்பன் ரயில் தூக்குப் பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம் (கோப்புப் படம்). 
பாம்பன் ரயில் தூக்குப் பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம் (கோப்புப் படம்). 
Updated on
1 min read



பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையிலும், கப்பல்கள் மற்றும் படகுகள் கடந்து செல்லவும் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது.  1914-இல் அமைக்கப்பட்ட இப்பாலம் ஆரம்பத்தில் மீட்டர் ரயில் பாதையாக இருந்தது. பின்னர் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
ரயில்வே நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்த இந்தப் பாலம், கடந்த 100 ஆண்டுகளில் திறந்து மூடும்போது எந்தவிதமான பழுதும் ஏற்படவில்லை. ஆனால், பாலத்தின் பராமரிப்புப் பணி தனியாருக்கு விடப்பட்ட பிறகு சில ஆண்டுகள் மட்டுமே முறையாக பராமரிப்பு செய்யப்பட்டு துருப்பிடிக்காத வகையில் வர்ணம் பூசப்பட்டது.  கடந்த 3 ஆண்டுகளாக முறையாக பராமரிப்பின்றியும், வர்ணம் பூசாமலும் பாலம் பழுதுபட்டும், பொலிவிழந்தும் காணப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி விசைப் படகுகள் செல்ல தூக்குப் பாலத்தை திறந்து மூடும்போது பழுதடைந்தது. மேலும் பாலத்தின் மையப் பகுதியில் தகடுகள் சேதமடைந்து விலகியது. அதையடுத்து, மண்டபம் - ராமேசுவரம் இடையே அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ரயில்வே தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தூக்குப் பாலத்தை ஆய்வு செய்து பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இதில் முக்கிய  பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க தலைமைப் பொறியாளர் முன்னிலையில் 2 முறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் இதுவரை ரயில்கள் இயக்கப்படவில்லை. அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தயக்கம் ஏன்?: பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது. 
ஆயிரக்கணக்கான பயணிகளுடன் ரயில் இயக்கப்படும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முடிவெடிக்க வேண்டிய நிலையில் உள்ள முக்கிய அதிகாரிகளில் சிலர் பணி ஓய்வு பெறும் நிலையில் இருப்பதாகவும்,  சிக்கல் இல்லாமல் ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர்கள் காட்டும் தயக்கம் காரணமாக பாலத்தில் மீண்டும் ரயில்களை இயக்க முடியாத நிலை நீடித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com