சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை தோப்பூரில் ஞாயிறு காலை நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் விடுத்துள்ள கோரிக்கைகளாவன:
அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும்.
ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
14-வது நிதிக்குழு தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதியை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.